எந்த முகூர்த்தத்தில் சாத்தான்குளம் என்று பெயர் வந்ததோ, அங்கு நடந்த அடுத்தடுத்த விபரீத வில்லங்க கொடூரங்கள் தமிழகத்தில் பெரும் பிரளயத்தைக் கிளப்பிவருகிறது.
2020 ஜூலை 6-ஆம் தேதியன்று சாத்தான்குளத்திலுள்ள ஜெயராஜ், அவரது மகன் பென்னிக்ஸ் இருவரையும் காவல் நிலையத்திற்கு கொண்டுவந்த காவல் ஆய்வாளர் ஸ்ரீதர், எஸ்.ஐ. ரகுகணேஷ் உள் ளிட்ட போலீசார், அங்கே அவர்களை விசாரணை என்ற பெயரில் ரவுண்டு கட்டி அடித்ததில் இருவரது உயிரும் பறந்திருக்கிறது. அந்த அளவுக்கு அந்தக் காவலர்களின் வெறித்தனமான சித்ரவதை மேலோங்கி யதற்கு அடிப்படை காரணமே, இந்த சம்பவத்திற்கு முன் னோட்டமாக முந்தைய ஜூன் மாதம் இதே போலீசாரால் விசாரணைக்காக கொண்டுவரப்பட்ட கூலித்தொழிலாளி மகேந்திரன் அடித்துக்கொல்லப்பட்ட சம்பவம் எந்தவிதமான மேல்நடவடிக்கையுமின்றி கடந்துபோனதுதான் என்கிறார்கள்.
மக்கள் மத்தியில் இந்த 9 போலீசாரும் பதில்சொல்லா விட்டாலும், நீதிமன்றத்தில் பதில்சொல்லவேண்டிய கட்டாயத்தி லிருக்கிறார்கள்..
கடந்த 2020, ஜூன் மாதம் சாத்தான்குளம் காவல் லிமிட்டில் அடங்கிய பேய்க்குளத்திலிருக்கும் ஸ்ரீவெங்கடேஷ்வரபுரம் ஊராட்சி மன்ற உறுப்பினரான ஜெயக்குமார் என்பவர் கொலைசெய்யப்பட்டார். அந்த கொலை தொடர்பாக, பேய்க்குளத்தில் இருக்கும் துரை என்பவரை விசாரிப்பதற்காக சாத்தான்குளம் காவல் ஆய்வாளர் ஸ்ரீதர், எஸ்.ஐ. ரகுகணேஷ் உள்ளிட்ட போலீசார், ப்ரண்ட்ஸ் ஆஃப் போலீசை சேர்ந்தவர்கள் என மொத்தம் 6 பேர் நடு இரவு 1 மணியளவில் அவரது வீட்டிற்குப் போயிருக்கிறார்கள். அதுசமயம் துரை அங்கில்லாமல் போகவே அங்கே தூங்கிக்கொண்டிருந்த அவரது தம்பியும் கூலித்தொழிலாளியுமான மகேந்திரனையும், அவரது மாமா தங்க வேலையும் விசாரணைக்காக அடித்தே இழுத்துச்சென்றிருக்கிறார் கள். அப்போது பதறிப்போய் தடுத்த மகேந்திரனின் தாய் வடிவம்மாளை நெட்டித் தள்ளிவிட்டு இழுத்துச்சென்றி ருக்கிறார்கள்.
காவல் நிலையம் கொண்டுவரப்பட்ட இவர்களை ஆய்வாளர் ஸ்ரீதர் தலைமையிலான போலீசார், கடுமையாகத் தாக்கியிருக்கிறார்கள். இதில் லாக்கப்பில் வைக்கப்பட்ட மகேந்திரனை கடும் சித்ரவதை செய்த போலீசார், உடம்பு முழுக்க இரத்தக் களறியாக்கியிருக்கிறார்கள். உச்சி முதல் உள்ளங்கால் வரை கடுமையான காயங்களால் கதறிய மகேந்திரன் ஒரு கட்டத்திற்குமேல் மயங்கி யிருக்கிறார். ஒருவழியாக அவரிடம் வெள்ளைப் பேப்பரில் கையெழுத்து வாங்கிக்கொண்டு விடுவித்திருக்கிறார்கள். போலீசாரின் தாக்குதலால் சீரழிந்த மகேந்திரன், தூத்துக்குடி அரசு மருத்துவ னையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டு, அது பலனளிக்காமல் போக மரணமடைந்திருக்கிறார்.
ஆதரவற்ற மகேந்திரனின் வயதான தாயார் வடிவம்மாள் அப்போதைய மாவட்ட எஸ்.பி., முதல்வரின் தனிப்பிரிவு என்று நியாயம்கேட்டு புகார் மனு அளித்ததில் எந்தவிதமான நட வடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை. இந்நிலையில் இந்த வழக்கில் நீதிமன்றம் தாமாக முன்வந்து வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து சி.பி.சி.ஐ.டி விசாரணைக்கு உத்தரவிட்டது. அப்போதைய விசாரணை அதிகாரியான சி.பி.சி.ஐ.டி. டி.எஸ்.பி. அணில்குமார் தலைமையில் வழக்குப் பதிவு செய்து விசாரணை தொடங்கியது. இதுகுறித்த வழக்கின் விசாரணை கோவில்பட்டி நீதிமன்றத்தில் நடந்துவருகிறது. இந்த வழக்கு விசாரணையின்போது பல்வேறு டி.எஸ்.பி.க்கள் மாற்றப்பட்டு தற்போது மதுரை சி.பி.சி.ஐ.டி. டி.எஸ்.பி அருணாச்சலம் தலைமையிலான போலீசார் கோவில்பட்டி நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்திருக்கின்றனர்.
இந்த வழக்கு ஜூலை 20 அன்று கோவில்பட்டி நீதிமன்ற நீதித்துறை நடுவர் ஆனந்த் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கில் பாதிக்கப்பட்ட மகேந்திரனின் தாயார் வடிவம்மாள் சார்பில் ஆஜரான தூத்துக்குடி வழக்கறிஞர் ஜெயச்சந்திரன் இந்த இறுதி அறிக்கையைப் பார்வையிட்டிருக்கிறார். அதில் சாத்தான்குளம் முன்னாள் எஸ்.ஐ. ரகுகணேஷ், முன்னாள் இன்ஸ்பெக்டர் ஸ்ரீதர் ஆகிய இருவரை மட்டும் குற்றவாளிகள் என்று இறுதியறிக்கையில் சேர்த்து, தன்னார்வக் காவலர்களான ப்ரண்ட்ஸ் ஆஃப் போலீஸ் உட்பட சில காவலர்கள் பெயர் களைத் தவிர்த்து இறுதி அறிக்கை தாக்கல்செய்யப் பட்டிருந்தது கண்டு அதிர்ந்திருக்கிறார். அறிக்கையைப் பார்வையிட்டதில் போலீசார் உள்ளிட்ட பிரண்ட்ஸ் ஆஃப் போலீஸ் சிலரின் பெயர்கள் விடுபட்டிருப்பது குறித்து வழக்கறிஞர் ஜெயச்சந்திரன் கடும் ஆட்சேபனை தெரிவித் திருக்கிறார்.
இந்த வழக்கு குறித்து பரிசீலனை செய்த நீதிமன்ற நீதித்துறை நடுவர் ஆனந்த், இதன்மீது ஒரு உத்தரவு பிறப்பித்திருக்கிறார். அந்த உத்தரவில், மகேந்திரனின் இறப்பு குறித்து போதுமான விபரங்களை புலன் விசாரணையில் சம்பந்தப்பட்ட விசாரணை அதிகாரி குறிப்பிடவேயில்லை, அதனை முறையாக விசாரித்து இறுதி அறிக்கை தாக்கல் செய்யவில்லை என்று அழுத்தமாகக் குறிப்பிட்டுள் ளார். மேலும் மகேந்திரனுக்கு உயிரிழப்பு ஏற்பட் டுள்ளதால் அதுகுறித்து உரிய முறையில் புலன் விசாரணை செய்யாமல் பெயர்தெரியாத எதிரிகளை நீக்கிய சி.பி.சி.ஐ.டி. தெற்கு காவல் நிலைய டி.எஸ்.பி. தாக்கல் செய்த இந்த இறுதி அறிக்கையை நீதிமன்றம் ஏற்றுக்கொள்ளவில்லை. வேறொரு சி.பி.சி.ஐ.டி. டி.எஸ்.பி.யை நியமித்து மேல் விசாரணை செய்து இறுதி அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டுமென்று உத்தரவிட்டிருக்கிறார்.
சி.பி.சி.ஐ.டி. தாக்கல் செய்த இந்த உல்டாவான குற்றப்பத்திரிகையை நீதிமன்றம் அலசி ஆராய்ந்து கண்டித்தது பொதுவெளியில் பேசுபொருளானதுடன், சி.பி.சி.ஐ.டி. யூனிட்டையே ஆடிப்போக வைத்திருக்கிறது. போலீசாரின் புலன்விசாரணை என்பது மேம்போக்கானது அல்ல, அதில் உண்மை, நம்பகத்தன்மை இருக்கவேண்டும் என்பதே முக்கிய நோக்கம் என்றும் பேசப்படுகிறது.
மகேந்திரனின் தாயாரான வடிவம்மாளை சந்தித்து அவரிடம் இதுகுறித்து பேசியபோது, அவரது கண்களில் கண்ணீர் அணைகட்டியிருந்தது.
"அன்னைக்கு ராவு 1 மணியிருக்கும், 4 போலீ சாரு, டி-சர்ட்டு போட்டிருந்த இரண்டு பேருன்னு 6 பேர் கதவ எட்டித்தள்ளிட்டு உள்ளவந்தவங்க யாரையோ தேடுனாங்க. என்ன நெனச்சாங்களோ தெரியல, படுத்திருந்த எம் மவன் மகேந்திரன காலால மிதிச்சு எந்திரிலேன்னு அடிச்சு இழுத்துட் டுப் போனாங்க. பதறிப்போய் என்னய்யா இப்படி அடிக்கீகன்னு கேட்டதுக்கு என்னய தள்ளி விட்டுட்டு எம் புள்ளைய இழுத் துட்டுப் போயிட்டாங்க. ஆதர வில்லாம நா பரிதவிச்சிட்டிருந்தப்ப ரெண்டு நாள் கழிச்சு உடம்பு பூரா ரத்தக்காயமா அரைமயக்கத்தில வந்த எம்மவன தூத்துக்குடி மருத்துவமனைல சேர்த்தோம். டி-சர்ட்டு போட்டிருந்த அவன் முதுகு பூரா போலீசு அடிச்சதுல ரத்தவிளாறாகி சட்டையே ஒட்டிக் கெடந்ததுய்யா. அவனால அம்மானுகூட பேசமுடியல. மயக்கமா கெடந்தவனோட உசுரு ரெண்டு நாள் கழிச்சு போயிருச்சுய்யா. இந்தளவுக்கு எம்புள்ளைய சித்ரவதை பண்ணிக் கொன்னுட்டாங்களே''” என்றார் தலையிலடித்தபடி.
ஆதரவற்ற வடிவம்மாள் வயிற்றுப் பிழைப்பிற்காக பீடி சுற்றிவருபவர். சம்பவத்தன்று மகேந்திரனை இழுத்துச்சென்ற போலீசார், போகிற போக்கில் குடித்தனமிருந்த அந்த வீட்டின் முன்சுவரையும் இடித்துத் தள்ளிவிட்டுச் சென்றதை வேதனையோடு நம்மிடம் சுட்டிக்காட்டினார் வடிவம்மாள்.
இந்த வழக்கில் வடிவம்மாளுக்காக ஆஜராகிவரும் வழக்கறிஞர் ஜெயச்சந்திரனை அவரது அலுவலகத்தில் சந்தித்தபோது, "மகேந்திரனின் அண்ணனைத் தேடிச் சென்றபோது அவர் இல்லாமல்போனதால் அவரது தம்பியான மகேந்திரனை இழுத்துச்சென்றிருக்கிறார்கள். போலீசார் இழுத்துச்சென்ற மகேந்திரன்மீது எந்தவித புகாரும் கிடையாது. போலீஸ் மற்றும் பிரண்ட்ஸ் ஆஃப் போலீஸ் என 6 பேர் வந்திருக் கிறார்கள். மகேந்திரனை சாத்தான்குளம் காவல் நிலையம் கொண்டுவந்ததும் அங்கே ஆய்வாளர் ஸ்ரீதர் மற்றும் போலீசார், மகேந்திரனை நிர்வாண மாக்கி கடுமையாகத் தாக்கியிருக்கிறார்கள். அவர் கள் அடித்த அடியில் மகேந்திரன் மயங்கிப்போன தால் அதிர்ச்சியான போலீசார் சாகும் தறுவாயில் அவரை வெளியேவிட்டிருக்கிறார்கள். இறந்தபோது கூட அவரது உடலை புதைக்கவிடாமல் செய்து அத்தனை தடயங்களையும் போலீசார் அழித்துள்ளனர்.
மகேந்திரனின் தாயார் அப்பாவி. ஆதரவற்ற வர். முதல்வர் மற்றும் பல்வேறு அதிகாரிகளுக்கு புகாரனுப்பியும் நடவடிக்கையில்லை. சி.பி.சி.ஐ.டி.யின் பல்வேறு விசாரணை அதிகாரிகள் மாற்றப்பட்டு தற்போது சி.பி.சி.ஐ.டி. தாக்கல் செய்த குற்றப் பத்திரிகையில் பெயர் சொல்லப் படாத 4 எதிரிகளின் பெயர்நீக்கப் பட்டுள்ளது. அந்த நீக்கத்திற்கான காரணமும் முகாந்திரமும் சரிவரச் சொல்லப்படவில்லை. அவர்களுக்குச் சாதகமாகவே இந்தக் குற்றப் பத்திரிகை தாக்கல்செய்யப்பட்டுள் ளது. இதை ஏற்கமுடியாது என்று நான் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்தேன். அதனை நீதிபதியும் ஏற்றுக்கொண்டார். வேறு நேர்மையான அதிகாரியின் விசாரணைக்கு உத்தரவிடப் பட்டுள்ளது. குற்றவிசாரணை நடைமுறையில் இதுபோன்ற சம்பவங்கள் நடந்ததேயில்லை. இனிமேலாவது நேர்மையான விசாரணை நடத்தப்படுமென்று நாங்கள் எதிர்பார்க்கிறோம். பாதிக்கப்பட்ட ஏழைத் தாய் வடிவம்மாளுக்கு நீதி கிடைக்கவேண்டும்.
இந்த சம்பவத்தில் அப்போதே மாவட்டக் காவல் துறை சம்பந்தப்பட்ட அதிகாரிகளின் மீது உரிய நடவடிக்கை எடுத்திருந்தால் தந்தை -மகன் சித்ரவதை செய்யப்பட்டு கொலைசெய்யப்பட்டிருக் கமாட்டார்கள்''’என்றார் வழக்கறிஞர் ஜெயச் சந்திரன் ஆணித்தரமாக.
காவல் மரணங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கவேண்டிய கட்டாயத் தருணமிது.